அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Thursday, October 18, 2007

இவரை யார் தண்டிப்பது.....!

ஒரு பிரபல தமிழ் நடிகர், இன்னொரு மிகப்பிரபல நடிகரின் மகளுக்கிடையேயான அலைபேசி உரையாடலை இன்று கேட்க நேர்ந்தது....இந்த ஒலித்துணுக்கு கடந்த சில நாட்களாய் இனையத்தில் உலவிவருவதை எத்தனை பேர் அறிவீர்கள் என தெரியவில்லை....

மிகவும் கீழ்தரமான நோக்கத்துடன், திருமணம் நிச்சயமான அந்த பெண்ணை தொலைபேசியில் பாலியில் ரீதியாய் துன்புறுத்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த பெண்ணின் தாயாரும் உடனிருக்கிறார்.அவர் அறியா வண்ணம் தாயிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசி அவர் அனுமதியுடன் பெண்ணிடம் அபாச அர்ச்சனை செய்வதை தொலைபேசியில் பதிவும் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொண்டதாய் கூறி அதை அவர் வாயால் ஒப்புக்கொள்ளச்செய்து பின்னர் அவரை ப்ளாக்மெயில் செய்ய திட்டமிட்ட ஒரு சதிகாரனின் பேச்சாகவே அவரது பேச்சின் தொனி காணப்படுகிறது.கையறு நிலையில் அந்த பெண் கெஞ்சுவது பரிதாபமாய் இருக்கிறது.

இந்த நடிகர் சமீபத்தில் இன்னொரு நடிகையுடனான தனது தொடர்பினையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்போது அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் போக்கில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பேச்சுவார்த்தையை இனையத்தில் கசியவிடுவது யார் செயலாய் இருக்குமென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்....

இம்மாதிரியான மனவிகாரம் படைத்தவர்களை சட்டத்தின் வழி தண்டிக்க இயலுமா தெரியவில்லை...அதே நேரத்தில் இன்றைய நவநாகரீக மங்கையர் சுதந்திரம் என்கிற பேரில் வரம்பு மீறிவிட்டு பின்னர் இப்படி அல்லாடுவது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமலில்லை.

வயதின் வேகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு அவமானப்படுவது தேவைதானா....தனக்கு எல்லாம் கொடுத்து தன்னை சீராட்டி பாராட்டிய பெற்றோருக்கு இவர்கள் தரும் வெகுமதி தாங்கவெனா அவமானமும் மனவேதனையும்தான்....

வெளிவேஷம் போடும் அந்த நடிகர் மிகக்கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவரே...

இவரை யார் தண்டிப்பது...

சம்பந்தப்பட்ட ஒலித்துணுக்கை இங்கே இனைக்கலாம்தான்...ஆனால் மிகுந்த வேதனை தரும் அந்த உரையாடலை எனது சக பதிவர்கள் என் வழியாய் கேட்க வேண்டாமென தோன்றுவதால் தரவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Monday, October 15, 2007

விளங்கிய அறிவு....!




'மனோலயம் பெற்றால் மனிதன் 'மனோநாசம்' பெற்றால் ஞானி.
'புவியீர்ப்பு விசை' கடந்து, புறவெளியில் உலவுவதுபோல்
'புலன் ஈர்ப்பு விசை'யைக் கடந்து அகவெளியில் உலவும் அறிவு
புவியில் பொருளாகவோ வினையாகவோ, கடன் வைக்காமல்,
வெட்ட வெளியில் வெளியேறும் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவு'

Thursday, October 11, 2007

சொக்கனான...மாயாவி!

அன்புடையீர்...

ஏற்கனவே மாயாவி என்கிற பெயரில் பதிவர் ஒருவர் செயல்படுவதை அறியாது எனது பதிவிற்கும் அதே பெயரை வைக்க நேர்ந்தது. தற்போது குழப்பத்தினை தீர்க்கும் வகையில் மாயாவி என்கிற இந்த பதிவின் பெயர் 'சொக்கன்' என அழைக்கப்படும்...

அதாவது என்னுடைய பதிவுகளை படித்து நீங்கள்லாம் சொக்கிப் போய்டனும்னு வச்சிக்கிட்ட பெயர்...ஹி..ஹி...

-சொக்கன்

வெளம்பரம்



Idea cellular phone நிறுவனத்தின் சமீபத்திய வெளம்பரம்....நல்ல ஐடியால்ல....

என்சாய்...

Monday, October 8, 2007

நானுந்தான்.....

போன வாரம் மதுரையில் ஒரு நாள்

ஒரு பெரிய வங்கி காலை நேர பரபரப்பில் திணறிக்கொண்டிருக்க....

நான் ஒரு காசோலையுடன் High Value Clearence மூலமாய் அதை உடனடியாய் பணமாக்க வேண்டிய அவசரத்துடன் அணுக, நடைமுறைகளை ச்சுட்டிக்காட்டி என்னை வெறுப்பேற்றிய ஊழியரை எகிறிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஊழியர் ப(க)ணிவாய் மேளாளர் அறைக்கு வருமாறு அழைத்தார்.

மவனே இருடா! வந்து உன்ன வச்சிக்கறேன்னு கருவிக்கொண்டே அறைக்குள் நுழைந்தால், என்னை அழைத்த அந்த பெண்தான் அந்த கிளையின் மேளாளர்.முப்பதுகளில் பொலிவாய் இருந்த அவரை ரசிக்கிற மனநிலையில் நான் இல்லை...அவசரத்தில் இருந்தேன்.உட்காரச்சொல்லி பிரச்சினனயை கேட்டார்...காசோலையை வாங்கிப் பார்த்து பிரச்சினையில்லை நான் பார்த்துக்க்கொள்கிறேன், நீங்கள் சலான் ஃபில்லப் பண்ணிதாருங்கள் என ஒரு சலானையும் தந்தார்.

இது மரியாதை, என குஷியாகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கும் போது அவர் கேட்டார்....

நீங்க சரவணண்தானே...!

குழப்பமாய் நிமிர்ந்து ஆமென்றேன், அடுத்து .... பையண்தானே என கேட்க ஆச்சர்யமாய் உங்களுக்கு எங்க அப்பாவை தெரியுமாவென கேட்டேன்.சிரித்துக் கொண்டே ஏன் உங்களை தெரிஞ்சிருக்க கூடாதா! என கேட்டவர், என்னை தெரியலையா நான் ....னை என்றார்.

ஹி..ஹி..இந்த இடத்துல ஷாட் கட் பண்ணி ஒரு இருவது வருசம் பின்னால போவோமா!

பதினேழு வயசு வரை அவனுக்கு சைட் அடிக்கறதப் பத்தி பெரிசா எதுவும் தெரியாது ...அம்புட்டு சமத்து, காலைல எல்லா பசங்களும் 8.30 பஸ்ஸில தொங்கிட்டு வரும் போது அவன் மட்டும் மக்கு மாதிரி 8 மணி பஸ்ல உக்காந்து போவான்.டெய்லி க்ளாஸ்க்கு போற முதல் பையன் அவன்தான்.. பைய க்ளாஸ்ல வச்சிட்டு நேர சர்ச்சுக்கு வந்து தனியா உக்காந்திருப்பான்.பாவமன்னிப்பு கேக்க வர்றவங்களை வேடிக்கை பார்க்கறது அவனுக்கு பிடிச்ச அப்போதைய பொழுது போக்கு.8.30 மணி பஸ்ல வர்றவனையெல்லாம் கிறுக்குப் பயலுகன்னு நெனச்சிட்டு இருந்தான் அவன், அதே மாதிரி சாயங்காலம் எல்லாப் பயலும் பஸ்ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கும் போது அவன் முதல் பஸ்ஸுல வீட்டுக்கு போயிருவான்.

ப்ளஸ்2 வந்தப்பதான் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சது அவனுக்கு...ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் அவன் ஏரியாவுல இருக்கிற இரண்டு பொண்னுங்களை லவ் பண்றதாயும்,அவங்க யாரு, பின்னனி என்னன்னு சொல்ல முடியுமான்னு கேக்க...முதலில் பயந்தாலும் அப்புறம் ஆர்வ கோளாறில் சரி வர்றேன்னு போனான்.

அந்த நாள் அவனுக்கு இன்னிக்கும் மறக்க முடியாது...காதல் படத்துல வருமே அந்த ஸ்கூல் பொண்ணுங்கதான் அவங்க, அதில் ஒருத்தியை அவன் பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்தான். ஆனாலும் பயம்...தினமும் அந்த தேவதையை பார்க்க நண்பர்களுக்கு உதவும் சாக்கில் அவனும் அவர்களோடு ஜோதியில் ஐக்கியமானான். அவனுக்கு அந்த தேவதை அவனை மட்டும் விசேடமாய் பார்ப்பதாயும் சிரிப்பதாயும் தோன்றியது. ஒரு கட்டத்தில் நண்பர்கள் கண்டுபிடித்துவிடவே ஒரு உடன்படிக்கை தயாரானது...மூணு பேரும் ட்ரை பண்ணுவோம் யாருக்கு கிடைக்குதோ மத்தவன் ஒதுங்கிக்கனும்னு.....வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான்.

ஆனால் திருட்டுதனமாய் நண்பர்களுக்கு தெரியாமல் அந்த தேவதையின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்....சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு அவளை எப்படி அணுகுவது என்றெல்லாம் திட்டம் போட்டாலும் தைரியம் இல்லை.ஒரு வேளை வீட்டுக்கு தெரிந்தால், அவள் முடியாது என சொல்லி அவர்கள் வீட்டில் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டால் என நிஜங்களை நினைத்து பயந்தான், ஆனாலும் அவளை எப்படியாவது தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியத்துடன் ப்ளஸ்2 நெருக்கடிகளுடன் போராடினான்.

அம்மா அதிரடியாய் அவனது பின்னனியில் இருந்ததால் ஓரளவு நல்ல மதிப்பெண்களுடன் மூன்று துறைகளும் கிடைக்க மதுரையில் பொறியியல் சேர்ந்தான்.அவனது இரு நண்பர்களும் தேர்வில் பரிதாபமாய் சோடை போனது இன்றும் அவன் வருந்தும் விஷயம்.புதிய சூழல்,புதிய நண்பர்கள்,புதிய பெண்களின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய் தேவதையின் நினைப்பு கரைந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் படிச்சிமூடிச்சி செட்டிலானவுடன் வீட்டில் சொல்லி அவளை துனைவியாக்க வேண்டுமென அரசியல்வாதி போல நீண்டகால திட்டம் ஒன்றை தீட்டினான்.

இங்கன ஷாட் கட் பண்ணிடுவோமா....

வ்வாவ்...அடையாளமே தெரியல என்றேன் நிஜமான ஆச்சர்யத்துடன்.பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார் அந்த பெண்.வாழ்க்கையில் எப்போதோ பேசவேண்டும் என துடித்த பெண்ணிடம் இப்போதுதான் பேச முடிகிறது. சம்பிரதாயமாய் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.நான் நிறைய மாறிவிட்டதாக கூறினார்,நானும் சிரித்துக் கொண்டே அவரும் நிறைய மாறிவிட்டதாய் பொய் கூறினேன்...நிஜத்தில் நான் அவரை மறந்திருந்தேன் என்பதுதான் உண்மை.

விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தபோதுதான் கிறுக்குத்தனமாய் அந்த எண்ணம் தோன்றியது. மீண்டும் அவர் அறையை பாதி திறந்து உள்ளே எட்டிப் பார்க்க அவர் நிமிர....

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே...என சஸ்பென்ஸ் வைத்தேன். அவர் சிரித்தபடியே கண்ணாடியை உயர்த்தி என்ன என்பது மாதிரி பார்த்தார்....

நான் வாழ்க்கையில லவ் பண்ணின முதல் பெண் நீங்கதான் என்றேன்...சிரித்துக் கொண்டே தலை கவிழ்ந்து பைல்களை புரட்டிக் கொண்டே அவர் சொன்னார்....

நானுந்தான்....

சட்டென என்ன சொல்லதென தெரியவில்லை....

இறுக்கம் பரவ...வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு....God bless you...takecare...bye என்றேன் அவரும் சிரித்துக் கொண்டே அதை ஆமோதிக்க திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன்.

மனசு லேசாய் இருந்தாலும் கனமாய் இருந்தது.

நான் ஏன் நட்சத்திரமாகவில்லை....

இந்த வார நட்சத்திர பதிவர் வலை பதியவந்த ரெண்டாவது மாசத்துலயே இந்த நட்சத்திர பதிவராயிட்டாங்ன்னு படிச்சப்பத்தான் ஒரு விசயம் நச்சுன்னு உறைச்சது...அதாவது...நாம கூட மூனாவது வருசமா எளுதறோமே, எங்க ஏரியாவுல நீங்க ஒரு வாரமாவது நச்சத்திரமா இருகனும்னு ஒரு ஈ..காக்கா கூட அழுது புலம்பலையேன்னு.....

யார் யாரோ மொக்கை பதிவர், தக்கை பதிவர்ன்னு சொல்லிக்கிறாங்க...நான் எம்புட்டு பெரிய மொக்கையா/தக்கையா இருந்திருந்தா நம்மள இத்தன நாளா லூஸ்ல விட்ருப்பாங்க...ஹி..ஹி...இது வரைக்கும் இது குறித்து எனக்கு பெருசா வருத்தமெல்லாம் வந்ததில்லை.

இப்ப மனசுல பட்டதை வெளிப்படையா சொல்லியாச்சி...இனி எதிர்காலத்துல எல்லாரும் எழுதிமுடிச்சப்புறம் வேற அள் கிடைக்கலைன்னா நம்மளை கூப்டாலும் கூப்டலாம், ஆனா எனக்கு பெரிசா அதுல இஷ்டமில்லை....

ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருது கிடைக்கலியாமே!...ஹி..ஹி..அது மாதிரி நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை

அப்டியாவது நான் பெரிய ஆளாயிட்டு போறேனே!....தயவு செய்து அதை நிறைவேத்த உதவுங்கப்போய்....ஹி..ஹி...

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை....குறிப்பாக இந்தவாரபதிவர் வள்ளியை....)

Monday, October 1, 2007

ஆண்மையா அரைவேக்காட்டுத்தனமா....

சேது சமுத்திர திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைக்கும் போது பின்னாளில் தங்களின் பிழைப்புக்கு வழிகோலும் பிரச்சினையாக மாறுமென மதவாத அரசியல் கட்சிகளும்(வாதிகளும்) கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

தங்களின் பாரம்பரியங்களை கட்டிகாப்பாற்றும் இவர்களுக்கு அமெரிக்க நாசா சொல்லும் வரையில் இந்த பாலம் இருந்ததே தெரியாது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு முன்னர் வரை இவர்கள் இதை 'ஆடம்ஸ் ப்ரிட்ஜ்' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.தரைக்கு கீழே ஓடும் சரஸ்வதி நதியை பற்றி எழுதிவைத்த புராணங்கள் இந்த பாலம் இந்த இடத்தில் மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியினால் கட்டப்பட்டது என குறித்து வைக்காமல் போனது மிக துர்பாக்கிய நிகழ்வு.

சற்றேறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென மூக்கு வியர்த்து காவியும் கமண்டலமுமாய் கிளம்பி ராமேஸ்வரத்திற்கு கள்ள ரயிலேறி வந்து தங்களின் பக்தியையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திச் சென்றவர்களுக்கு, இந்த பிரச்சினைதான் மீண்டும் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் என தெரிந்ததும் பாலத்தை வைத்து குரங்கு வித்தை காட்டத் துவங்கியதும் அதை உசுப்பிவிடும் வகையில் நமது முதல்வரவர்கள் அரைவேக்காட்டுத் தனமாய் ஒரு கருத்தைச் சொல்லப் போக பிரச்சினை சுருசுருவென பற்றிக்கொண்டு விட்டது.

இந்த திட்டத்திற்காய் உடல்பொருள் ஆவியெல்லாம் தருவேன் என தமிழகமெங்கும் மேடையேறி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த 'வைக்கோ' நிச்சயமாய் அம்னீஷியாவினால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடை தீர்மானமான கருத்து. இல்லையென்றால் இன்னேரம் துள்ளிக்குதித்து தெருவிற்கு வந்திருப்பார்தானே...நம்முடைய துரதிர்ஷ்டம் இலங்கை தமிழர்களுக்கு இடரென்றால்தான் அவரது தசையாடும் போலும்.

இந்த திட்டம் வந்தால் முதலில் பவழப்பாறை திட்டுக்கள் எல்லாம் அழிந்து போய் சுற்றுப்புற சூழல் மாசுபடுமென கவலைப்பட்டு இயற்கை ஆர்வலராய் அவதாரமெடுத்த நம்து முன்னாள் முதல்வர் அருமைத் தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்கள் பின்னாளில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்த காண்டத்தை அநேகமாய் எல்லோரும் மறந்திருப்பீர்கள் என்கிற தைரியத்தில் இந்த வழியாக் கப்பல் போனால் செலவு கூடுமென பொருளாதார நிபுணராகி திட்டத்தை இப்போது எதிர்க்கிறார்.

குடும்பத்தில் குழப்பம், கூட்டணியில் குத்துவெட்டு வீட்டுக்குள் வேகத்தை காட்டமுடியாத தலைவர் தன் கோவத்தையும், எரிச்சலையும் சபையில் ராமர் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் காட்டி பிரச்சினைக்கு மேலும் தீ வார்க்கிறார்.

இயற்கையில் உருவான மணல் திட்டு என நிலவியல்,கடலியல் துறை வல்லுனர்கள் கூவிக்கூவி சொன்னாலும் எந்த மடையன் காதிலும் விழவில்லை. அவனவனுக்கு அவனவன் கஷ்டம்...அதை வெளியில் சொல்லமுடியாமல் கொள்கை, வெங்காயம், பண்பாடு என கூத்தடிக்கின்றனர்.

காண்ட்ராக்டர்களிடம் வாங்கிய கமிஷனுக்காய் ஒருவர், வருமானம் போய்விடுமே என்கிற அச்சத்தில் இலங்கையில் இருந்து வரும் நெருக்கடிக்கு விலை போய் கூச்சலிடும் ஒருவர்..எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென நினைக்கும் புண்ணியவதி, மதத்தின் பெயரால் மக்களை மடையர்களாக்கி பதவி சுகம் காண நினைக்கும் இந்துத்வவியாதிகள்...இருக்கிற ஆட்சியதிகாரத்தை காப்பாற்ற எந்தளவும் கீழிறங்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள், இவர்களுக்கிடையில் முந்திரிக்கொட்டையாய் கருத்துச் சொல்லும் நீதிமான்கள்....

மொத்தத்தில் அனைவருக்கும் தங்கள் சொந்த லாபநஷ்டங்களே முன்னால் நிற்கின்றன. இதைத்தான் பொதுநலமென வாய்ஜாலமாய் விற்றுக்கொண்டிருக்கின்றனர். நாம் அரை வேக்காடுகளாய் ஆளுக்கொரு பக்கம் நின்று லாவனி பேசிக்கொண்டிருக்கிறோம்.

300 மீட்டர்/அடிக்கு ஒரு மணல் திட்டை அகற்றுவதால் தமிழகத்தில் ஆறு கடற்கரையோர மாவட்டங்களில் தொழில்வாய்ப்பும்,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,கடலூர் போன்ற துறைமுகங்களுக்கு நன்மையும் இதனால் அரசிற்கு கணிசமாய் வருவாயும், கப்பல்களுக்கு எரிபொருள் சேமிப்பும் வருவதை தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்காய் வீறுகொண்டெழுந்து வீதி நாடகம் போடும் இவர்களையா ஆண்மையாளர்கள் என்பது...அரைவேக்காடுகளா! விழித்துக் கொள்ளுங்கள்.