அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Sunday, July 6, 2008

உத்தரவு வாங்கிக்கிறேன்....

இதுதான் கடைசிப் பதிவு....இதுவரை பெரிதாய் ஏதும் எழுதிவிடவில்லைதான், ஆனால் நிறைய அழுத்தங்களையும், ஆதங்கங்களையும் இறக்கிவைக்க இரண்டாம் சொக்கன் நிறையவே உதவியிருக்கிறான், அந்த வகையில் திருப்திதான்.

அடையாளங்களை உருவாக்குவதும் அதை தக்க வைப்பதும் கடினம்தான்...உழைப்பும்,ஒருங்கினைப்பும் இல்லையேல் அது சாத்தியமுமில்லைதான். ஆனால் உருவான அடையாளங்கள், ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளுக்குள் நம்மை தக்க வைக்க முயல்வதும், அதற்காய் வளைந்து கொடுப்பதும் எனக்கு இஷ்டமாயில்லை. அதன் பொருட்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். என்னால் புதிய அடையாளங்களை உருவாக்கவும், அதனை உயர்த்திப் பிடிக்கவும் முடியுமென்கிற திமிரும் கூட காரணமாயிருக்கலாம்...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம், எது எப்படியோ போகட்டும்.

இரண்டாம் சொக்கன் என்கிற பெயர் கொஞ்சம் வித்தியாசமானதும், மனதுக்கு நெருக்கமானதாயும் இருந்தது. இந்த பெயருக்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது, இந்த இறுதிப் பதிவில் அதை சொல்லி முடிக்கிறேன்.

ஏற்கனவே மாயாவி என ஒரு பதிவர் இருப்பது தெரியாமல் இந்த பதிவிற்கு முதலில் வைத்த பெயர் மாயாவி என்பதே...அவர் வந்து சவுண்ட் விடவே, சொக்கன் என மாற்றினேன்,பார்த்தால் சொக்கர் ஏற்கனவே தமிழில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

இதென்னடா பெயருக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுதில் மதுரை போக வேண்டியிருந்தது...வழமை போல சொக்கருக்கும்,மீனாட்சிக்கும் அட்டெண்டன்ஸ் போட போனேன்.கோவிலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஐடியா தோன்றியது, நாமளும் இத்தனை வருசமா சொக்கரோட க்ளோஸா சுத்தீட்டு இருக்கோமே, ஏன் நாம இரண்டாம் சொக்கன்னு பேர் வைச்சிக்க கூடாதுன்னு....

யார் வேணுன்னாலும் இரண்டாம்னு வச்சிக்க முடியுமா, அதுக்கு ஒரு தகுதி, தராதரம் வேணும்ல...படங்காட்றதுககாக பேர வைக்கப் போய், சொக்கர் கோவமாகி திருவிளையாடல் ஏதும் நடத்தீட்டார்னா நாம தாங்குவோமா, நாம வேற ஹாஃப் பாயில்ட் ஆ(நா)த்திகன்.

இப்படில்லாம் யோசிச்சிட்டே, சொக்கநாதர் சன்னிதி வந்தேன்...அவர்கிட்ட...பாஸ், நான் இரண்டாம் சொக்கன்னு பதிவுக்கு பேர் வச்சிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தா இப்பவே சொல்லீடுங்கோ, நீங்க கோவிச்சு, நான் டேமேஜாகாம இருக்கனும்னா, சீக்கிரமா ஒரு சிக்னல் குடுங்க நான் புரிஞ்சிக்கறேன்னு தாக்கல் சொல்லீட்டு சன்னிதி விட்டு வெளியே வந்தேன்.

அதோட அதை மறந்துட்டு எல்லாம் சுத்தீட்டு, கடைசியா மீனாட்சி சன்னிதி முன்னால இருக்கற பலிபீடம் முனால வந்து, பெரிசா ஒரு கும்புடு போட்டு...போய்ட்டு வாறேன் தாயீன்னு சொல்லீட்டு இருக்கும் போது திடீர்னு நம்ம தோளை ஒரு முரட்டு கரம் ஒன்னு இருக்கமா புடிச்சி திருப்பிச்சு...

எவண்டாது..ன்னு திரும்பினா அஞ்சடி ஒசரத்துல வறுமையை உடம்பிலும், உடையிலும் தேக்கிய வயதானவர் ஒருவர். நான் சுதாரிக்கறதுக்குள்ள என் கைக்குள்ள ஒரு கவரை திணிச்சு, அதிகாரமா...”இதுல ருத்ராட்சம் இருக்கு, உனக்குத்தான்...போட்டுக்க”ன்னு சொல்லீட்டு விடுவிடுன்னு நடந்து முக்குறுனி பிள்ளையார் சன்னிதி பக்கம் நடந்து போயிட்டார்.

எனக்கு ஒன்னுமே புரியலை, அந்த பெரியவர் பின்னால போய் பாக்கலாம்னு ரெண்டு அடி நடந்தேன், அப்புறம் ஒன்னுமே தோனாம தெப்பக்குளம் படிக்கட்டுல வந்து உக்காந்தேன்.அதி காலை நேரத்துல அந்த இடத்தில் வேற யாருமே இல்லை...அந்த கவரை பிரிச்சா உள்ளே புத்தம் புதுசான சிவப்பு கயித்துல கோர்த்த ஒரு ருத்ராட்சம் இருந்துச்சி.

ரொம்ப நேரம் ஒன்னும் புரியல, இந்த காலை நேரத்துல ஆளரவம் இல்லாத ஒரு சூழல்ல...என்னை வலுவா புடிச்சி என் கையில எதுக்கு திணிச்சுட்டு போகனும். அப்பத்தான் மண்டைக்குள்ள வெளக்கெறிஞ்சிச்சு...இரண்டாம் சொக்கனுக்கு ஓக்கேன்னு பாஸ் சொல்ல்ராறோன்னு. என்ன கொடுமையிது....ஹி..ஹி...

சரி இதையே சம்மதம்னு வச்சிக்குவம்னு மொத வெலையா இரண்டாம் சொக்கனை அரங்கேற்றியாச்சு...இப்ப இந்த பதிவோட அவரை ஏறக்கட்டியுமாச்சு...பாரம் குறைந்தது.

அந்த ருத்ராச்சத்தை ரொம்ம நாளாய் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன், ஒரு சுபநாளில் ஹைகமாண்ட் அதை பறிமுதல் செய்து ஒரு தங்கசங்கிலியில் கோர்த்து கொடுக்க.... இப்பொழுது அதை உருட்டிக் கொண்டே இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

முக்கிய அறிவிப்பு: இனிமேற்கொண்டு இரண்டாம் சொக்கன் என்கிற பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அனுமதிக்க வேண்டாம். மீறி அனுமதித்தால் அதற்கு நானே, முதலாம் சொக்கரோ எந்த வகையில் பொறுப்பாக மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பால, இன்னொரு மேட்டர், ஆரும்...பதிவ விட்டு போவாதே, தொடர்ந்து எளுதளைன்னா உண்ணாவிரதம் இருப்பேன், மறியல் பன்ணுவேன்னலாம் ஆர்ப்பாட்டம் பண்ணி அளுவாச்சி காட்டக்கூடாது. உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எங்கன போயிரப்போறேன், எனக்கு வேற யார் இருக்கா....எனக்கே அளுவாச்சியா வருது...ஹி..ஹி...முடிச்சிக்கறேன்

Tuesday, June 17, 2008

நான் இப்ப நாலாங்க்ளாஸ்

மெய்யாலுமே...நாலாங்க்ளாஸ் வந்துட்டேன்....ஒரு முக்கியமான அறிவிப்பு இந்த பதிவின் கடைசியில் இருக்கிறது.

ஹி..ஹி..பதிவெழுத ஆரம்பிச்சி மூனு வருசம் முடிஞ்சத வேறெப்படி சொல்றதாம். மூனு வருசம் போனதே தெரியலை. என்னோடு சம காலத்தில் எழுத ஆரம்பித்த பலர் தாமே முன்வந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். புதியவர்கள் பலர் நம்பிக்கையளிக்கிறார்கள். பலர் மின்மினி பூச்சிகளாய் வெளிச்சம் காட்டி கரைந்து போய்விட்டனர்.

இப்போது தொடர்ச்சியாக மூன்று நான்கு வருடங்களாய் பதிவெழுதுபவர்களை விரல்விட்டு என்ணிவிடலாம்.நம்மில் பலர் தங்களின் சுயபிரதாபங்களை அப்படி இப்படி கொஞ்சம் பில்டப்புடன் பதிவாய் எழுத ஆரம்பித்து,வாசக வட்டம் வந்த பின்னர் அதற்கென வலிந்து எழுத ஆரம்பிப்பதையும்,ஒரு கட்டத்தில் வாசகவட்டத்தை தக்க வைக்க எல்லாவிதமான குரங்கு சேஷ்ட்டைகள் செய்வதை என்னைப் போலவே எல்லோரும் அவஸ்தையுடன் அவதானித்திருப்பீர்கள்.

என்வரையில், நான் எந்த கும்பலையும் சேராததனாலேயே இத்தனை காலம் பதிவுலகில் இருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கென வாசகவட்டம் எப்போதுமே இருந்ததில்லை. அதை நான் விரும்பியதுமில்லை, அதற்கென எழுதுவதுமில்லை.நான் இங்கே பெரிதாய் இதுவரைக்கும் அங்கீகரிக்கப் பட்டதுமில்லை, இப்போதைக்கு அது குறித்த வருத்தமுமில்லை. சமயங்களில் பலருக்கு உவப்பில்லாத கருத்துக்களை முன்வைக்கும் வாய்ப்புகள் வந்த போது அதை நிறைவாகவே செய்திருக்கிறேன் என்கிற திருப்தி இருக்கிறது.

பதிவுலகில் என்ன சாதித்தாய் என்கிற கேள்விக்கு என்னால் பெருமையாய் பதில் சொல்லமுடியும்....இன்னமும் நிறைய சாதிக்க வேண்டியிருப்பதால் அதை பற்றி பீற்றிக் கொளள விரும்பவில்லை, ஆனால் அந்த முயற்சி எத்தகையது என்பது பதிவுலகில் என்னை தொடரும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.அந்த நண்பர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.

நெறய எழுதலாம்தான்...அதெல்லாம் இனி அஞ்சாங்க்ளாஸ் வந்த பின்னால எழுதறேன்...சரியா

விரைவில் இந்த பதிவு கைவிடப்படும்...(ஹி..ஹி..ஆரம்பிச்சிட்டான்யா ன்னு தோணுதா?)

(இரண்டு நிமிடங்களில் தட்டிய எக்ஸ்ப்ரஸ் பதிவிது...இந்த டீட்டெய்ல் நம்ம கவி.முத்துலட்சுமி அவர்களுக்காக...ஹி..ஹி)

ஒலக நாயகன் கவனத்திற்கு....

வலையுலகில் ஒரு வழியாக தசாவதார அலை ஓய்ந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த பதிவினை எழுதுகிறேன். ஒலக நாயகனை விட விஜய்.டி.ராசேந்தர் ஒரு விஷயத்தில் உயர்வானவராக தெரிகிறார். டி.ஆர் தன் சொந்த காசில் நம்மை இம்சிக்கிறார், ஒலக நாயகனோ ஊரான் காசில் தானும் இம்சைப்பட்டு எல்லாரையும் இம்சித்திருக்கிறார்.

ஆளாளுக்கு உலகத்தரம், உல்கத்தரம்னு சொல்றாங்க...என் வரையில் உலகத்தரமான தமிழ்படம்னா பருத்தி வீரனைச் சொல்வேன்...அதுதான் உலகத்தரம்..அதாவது உயர்வான தரம்.கோடி கோடியாய் செலவழிப்பதாலயே ஒரு படம் உலகத்தரமானதாகி விடாது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.

உள்ளூர் தயாரிப்பாளர்களை போண்டியாக்கிவிட்ட ஒலக நாயகன் தனது அடுத்தடுத்த பரிசோதனைகளுக்காக இப்போது வால்ட் டிஸ்னி மாதிரியான உலகத்தர படாதிபதிகளுக்கு படம் காட்ட துவங்க்யிருக்கிறார்.பாவம் அவர்களாவது இந்த கலைஞானி(?)யிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதே என்னுடைய கவலை.

ஒருவேளை அப்படி யாராவது இளிச்சவாய் ப்ரொட்யூசர்கள் கிடைத்தால் கமலஹாசன் பின் வரும் சாதனைகளையும் முயற்சித்து, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு(!) கொண்டு செல்ல என் வாழ்த்துகள்.

1913ல் வெளியான Sixty Years a Queen என்ற படத்தில் Rolf Leslie, 27 வேடங்களில் நடித்திருக்கிறார்.

1929ல் வெளியான Only me என்ற படத்தில் Lupino Lane, 24 வேடத்தில் நடித்திருக்கிறார்.

1915 வெளியான Birth of a Nation என்ற படத்தில் Joseph Henabery 13 வேடங்களில் நடித்திருக்கிறார்

1965 ல் வெளியான Pas question le samedi என்ற படத்தில் Robert Hirsch 12 வேடங்களில் நடித்திருக்கிறார்.

எது எப்படியோ தனது தசாவதாரத்தின் மூலம் நமது நடிகர் திலகத்தின் அருமை பெருமையை மேலும் நம்மை உணரச்செய்த பெருமை கமலுக்கு மட்டுமே உரித்தானதாகி விட்டது.

பா.ம.க உறவு முறிந்தது - தி.மு.க

பா.ம.க உடனான உறவு முறிந்ததாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது...

இன்று மாலை அன்னா அறிவாலயத்தில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில், பா.ம.க உடனான உறவு குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க வின் இந்த அறிவிப்பால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் டாக்டர்.அன்புமணி ராமதாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தப் போவதில்லை என முதல்வர்.கருனாநிதி கூறியுள்ளார்.

Monday, June 9, 2008

எழுதவே பிடிக்கலை....

இப்பல்லாம் பதிவெழுதவே பிடிக்கலை...எழுதாம இருந்துரலாம்னு நினைச்சேன், அதுலயும் ஒரு அபாயமிருக்கறத கண்டுபிடிச்சப்புறம்தான் இந்த பதிவை எழுத ஆரம்பிச்சேன். என்ன காரணமுன்னு தெரியனும்னா முழுப்பதிவையும் நீங்க படிச்சாகனும்.

மொதல்ல கொஞ்சம் அரசியல் பேசுவம்...சரியா!, அழகிரி கலைஞருக்கு கட்டளைன்னு போட்டு ஏதோ ஒரு வாரபத்திரிக்கை வெளம்பரம் பார்த்தேன். சன் டிவி சகோதரர்களை சந்திக்கக்கூடாதுன்னு அழகிரி கலைஞரை மெரட்டின வெவகாரம் CNNIBN, லயும், அவங்க சம்பந்தி ஹிண்டுவுலயும் வந்திருந்திச்சி...மெய்யாலுமே சந்தோசமாய்ட்டேன். அழகிரி செஞ்சது கரெக்ட்டுதான்...பின்ன உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நெனச்சவய்ங்கள இம்புட்டு விட்டதே பெரிய விசயம். என்னடா இவன் அழகிரியோட அடிவருடியாய்ட்டானான்னு யோசிக்கிறீங்களா...

மதுரக்காரய்ங்க பாசக்காரப் பயலுக, உயிரயும் கொடுப்பாய்ங்க, ஆனா அதே நேரத்துல வம்பு, த்ரோகம்னு வந்துட்டா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்...அத இப்ப அழகிரிகிட்ட பாக்கும் போது சந்தோசமாருக்கு. நான் இருக்கறவரை அந்தப் பயலுகளை எங்க குடும்பத்துக்குள்ள நொழயவிடமாட்டேன்னு சொன்னது சரிதான்னு நினைக்கிறேன். நாஞ் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுன்னு நினைக்கிறேன்.

இப்ப ஒரு சினிமா பாட்டு....ஒரு காலத்ல இந்த பாட்டையும், பாட்லவர்ற புள்ளையயும் பார்த்து கெறங்கிப் போய் கெடந்தவன் நான். இது வரைக்கும் கள்ளங்கபடமில்லாத அழகோட ஒரு ஹீரோயின் வரலைன்னுதான் சொல்லுவேன். மணிஷா கொய்ராலா பம்பாய் படத்துல ஆரம்பத்துல கொஞ்சம் பாசாங்கில்லாத அழகோட வருவார்.

நான் சொல்ற ஹீரோயினோட பேரு பாக்யஸ்ரீ, கொஞ்சப்படம்தான் நடிச்சார், அப்பாலிக்கா கல்யாணம் பண்ணீட்டு செட்லாய்ட்டார்னு நினைக்கிறேன். நான் சொல்ற படம் "மைய்னே ப்யார் கியா", பாட்டு 'தில் தீவானா பின் சஜ்னா'...என்னாவொரு மெலடி, அப்படியே கரைச்சிருவாய்ங்க இந்த பாட்ல. அப்ப லவ்வடிச்சிட்டிருந்த சமயமா...இந்த பாட்ட கேட்டாலே ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே லவ்விங்ஸ்தான் ஹி...ஹி...

பாட்ட இங்கன போய் பாருங்க...இப்பவே சொல்லீட்டேன் பாட்ல சல்மான்கான் சம்பந்தமேயில்லாம குரங்கு மாதிரி குட்டிக்கரணமெல்லாம் போட்டு உங்களை படுத்துவார்...பாக்யஸ்ரீக்காக பொறுத்துக்கங்க. பாட்டு வரியையும், அர்த்தத்தையும் இங்கபோட்ருக்கேன். படிச்சிப் பார்த்துட்டு சொல்லுங்க. ஹிந்தியில விஷாரத் வரை படிச்சது இந்த மாதிரி பாட்டுக் கேக்கத்தான் யூஸாவுது(சைக்கிள் கேப்ல நான் ஹிந்தி பண்டிட்!..னு சொல்லியாச்சி..ஹி..ஹி..)

Dil Deewana Bin Sajna Ke Maane Na
The heart is crazy, without my dear, it does not listen.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na
It is mad, even after making it understand it does not understand
Dhak Dhak Bole, It Ut Dole Din Raina
It goes Dhak Dhak (beating of the heart), it dances day and night.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Duniya Mange Apni Murade Main To Mangu Saajan
The world asks for its wishes. I just ask for my dear.
Rahe Salaamat Mera Sajna Aur Sajna Ka Aangan
Let my dear and his abode be safe
Iske Siva Dil Rab Se Kuch Bhi Chahe Na
Other than this, my heart does not ask for anything else from God.
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

Jee Yeh Chahe Bana Ke Aanchal Tum Ko Lapetu Tan Pe
My heart desires that I should wrap you around my body like a Palloo (long hanging end of the sari).
Kabhi Yeh Sochu Main Ud Jau Tum Ko Liye Gagan Pe
Sometimes I think I should fly away with you in the clouds.
Aur Bhi Kuch Hain Dil Ke Iraade Kya Kehna
There are many more wishes in my heart, what should I say?
Yeh Pagla Hai, Samjhane Se Samjhe Na...

இப்படி இம்சை பண்றதுக்கு இவன் பதிவெழுதாமலே இருந்திருக்கலாம்னு தோணுமே....எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஆனாலும் ஏன் எழுதறேன்ன்னா...

ஒரு வேளை நான் எழுதறதை நிறுத்தீட்டா, அப்புறம் நீங்க எல்லாருமா சேர்ந்து என்னை திரு.ஜெயகாந்தனுக்கு இனையா வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கன்னா...என்ன கொடுமையிது, இதெல்லாம் இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு தேவையா, அதுனால....நீங்க படிச்சாலும் படிக்காட்டியும், நான் தொடர்ந்து எளுதறதா இருக்கேன்.

ஹி...ஹி...ம்ம்ம்ம்

Wednesday, May 28, 2008

தூவல் கொட்டாரத்திலிருந்து பாண்டி அன்னை வரை...

சனிக்கிழமை மதியம் சேனல் மேய்ந்து கொண்டிருந்த போது ஏசியா நெட்டில் தூவல்கொட்டாரம் ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் இருந்து மளையாள படங்கள் என்றாலே ஒரு கிக்தான். என்ன ஒரு வித்தியாசம் அப்போது படத்திற்கு இடையே வரும் பிட்டுக்காக படம் பார்த்தேன், இப்போது படங்களை பார்க்கிறேன்....அவ்வளவே. மளையாள படங்களில் வரும் கிராமமும் அது சார்ந்த சூழலும் அதன் மக்களும் என்னை கவர்ந்ததுண்டு. அடுத்த பிறவி என ஒன்றிருக்குமானால் கேரளாவில் ஏதாவது ஒரு கிராமத்தின் வசதியான ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன். இந்திய அளவில் மிகச்சிறந்த நூறு நடிகர்கள் என பட்டியலிட்டால் அதில் நிறைய மலையாளா நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

தூவல் கொட்டாரமும் கிராமிய பிண்ணனி சார்ந்த ஒரு கதைதான்...கதையெல்லாம் சொல்லி உங்களை கொடுமைப்படுத்தப் போவதில்லை.வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். மிகச்சிறந்த படமென்று சொல்லமுடியாது, ஆனால் கீராமீயமும் அதன் மக்களும்,உறவுகளும் முடிந்தவரையில் பாசாங்கில்லாமல் நகைச்சுவையாக பதியப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. எல்லாம் சரிதான் இதுவரையில் தூவல்கொட்டாரத்திற்கு அர்த்தம் தெரியாது...அழகிய மளையாள சேச்சிகள் யாராவது என் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வந்தால் சந்தோஷப்படுவேன்.

படம் பார்த்து முடித்த கையோடு பாண்டிச்சேரி கிளம்பினேன்...திட்டமிட்ட பயணம் இல்லை...திடீரென தோன்றியது. பாண்டிச்சேரி பக்கம் அடிக்கடி போயிருந்தாலும் அரவிந்தர் ஆசிரமத்திறகு போனதில்லை. இந்த முறை அரவிந்தாஸ்ரமம் சென்றுவிட்டு ஆரோவில் போய்வருவது என தீர்மானம். ஐந்தரை மணிவாக்கில் கிளம்பி திண்டிவனம் போய் அப்டிக்கா லெஃப்ட்ல கட் பண்ணி பாண்டிச்சேரியை முத்தமிட்டபோது ஏழரை. வழக்கமாய் டேராப் போடும் 'மாஸ்'ஸில் முகம் கழுவி கடற்கரை போய் குடும்பமாய் பத்து மணி வரை அரட்டையடித்துவிட்டு, அஞ்சப்பரில் ஒரு கட்டு கட்டிவிட்டு அறை திரும்பியபோது சந்தோஷமாய் உணர்ந்தேன்.


(எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது கேட்டுப்பாருங்கள்)

காலையில் அரவிந்தாஸ்ரமம், பெரிய வளாகமாயிருக்குமென நினைத்திருந்தேன், ஏமாற்றமாய் போய்விட்டது. ஒரு வீடும் அதன் பக்கத்தில் தோட்டம் மாதிரியான இடத்தில் அரவிந்தர் மற்றும் மதர் என்றழைக்கப்படும் அன்னையும் ஒரே சமாதியில்.....எல்லோரும் மண்டியிட்டு சமாதியில் தலைவைத்து கண்மூடி தியாணித்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார். சமாதியை சுற்றி நிறைய பேர் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். எனக்கும் தியானம் செய்யவேண்டுமென ஆசைதான், ஆனால் மனது அலைகிறது. மவனே எத்தனை நாள் அலைவே...என்னிக்காவது ஒரு நாள் அடங்குவேல்ல அன்னிக்கு தியானம் பண்ணிக்கிறேனென தியானத்தை தியாகம் செய்தவன் நான். சமாதியில் நானும் மண்டியிட்டு தலைவைத்து கண்னை மூடினேன், வித்தியாசமாய் ஏதும் தோன்றவில்லை.... பின்னால் விரட்டிய ஆசாமியின் முகம்தான் நியாபகத்துக்கு வந்து தொலைத்தது.

அந்த வீட்டில் அரவிந்தர் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.எனக்கு அரவிந்தரைப்பற்றி எதுவும் தெரியாது, அதன் பொருட்டு நாலைந்து தமிழ்புத்தகங்களை வாங்கினேன். அரவிந்தரின்,'எனது சிறை அனுபவம்' என்ற புத்தகத்தை முதலில் வாசிக்க நினைத்திருக்கிறேன். இந்த வருடத்திற்குள் வாசித்தாகவேண்டும்.

ஆரோவில் போய் ஏமாந்தது தனிக்கதை, எழுதுகிற எனக்கே இந்த இடத்தில் சலிப்பு தட்டுகிறது...பாவம் பிழைத்துப் போங்கள். இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


இரண்டாம் சொக்கன் என்கிற பெயருக்கான காரணத்தைக் கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களும்,தொலை பேசி அழைப்புகள் வந்து தொல்லை செய்வதாக நினைப்பதால் எதிர்வரும் பதிவொன்றில் அதை பகிர்ந்து கொள்கிறேன்....ஹி...ஹ்ஹி...ஹி

Tuesday, May 20, 2008

அடுத்த நிதியமைச்சரும், பிரியாணிக்கடையும்

கொள்ளிக்கட்டையால் தலை சொறிந்தால் எப்படியிருக்கும்....அப்படித்தானிருக்கிறது சென்னை வெய்யில். என்னை சுற்றி அத்தனை பேரும் விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்து என் வயிற்றெறிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கமிட்மெண்ட்களை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. இதில் விடுமுறையாவது வெங்காயமாவது......

எனக்கென்னவோ கலைஞர் சாதுர்யமாய் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டாரோ என நினைக்கிறேன். என்னவெல்லாம் நடக்கும் என இப்போதே சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசில் இருந்து கலைஞர் விலகமாட்டார். ஆனால் காங்கிரஸிடம் இருந்து விலகுவார்.

தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன்,முஸ்லீம் லீக் இவர்களோடு வாசன் கோஷ்டி சேர்ந்து கொள்ளும்.

பாரதீய ஜனதா கட்சியுடன் அம்மா வேண்டா வெறுப்பாய் கூட்டனி வைத்துக் கொள்வார். வைக்கோ வழக்கம் போல தமாஷ் பண்ணுவார்.

கேப்டன் நாற்பது தொகுதியிலும் அம்மாவின் ஓட்டை பிரித்து தி.மு.க கூட்டனி வெற்றிக்காக பாடுபடுவார்.

சிதம்பரத்தின் புண்ணியத்தால் பாரதீய ஜனதாகட்சி நாடெங்கும் நிறைய இடத்தில் ஜெயித்துத் தொலைக்கும்.

மூன்றாம் அணி கோமாளிகள் லல்லு, முலாயம், மாயாவதி, கம்யூனிஸ்ட் எல்லாருமாய் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவை அடுத்த பிரதமராக்குவார்கள்.

வழக்கம் போல டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராய் தொடர்வார்.

இதுதான் நடக்கப் போவுது.......

கொஞ்சம் முயற்சி செய்தால் எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் ஒருவர் கஜினி முகமது கணக்காய் போரடிக்கொண்டிருக்கிற அல்லது கிடைக்க வாய்ப்பிருக்கிற அம்மா கட்சி சீட் அவரின் வயதின் காரணமாய் இளைஞனான எனக்குத் தரப்பட்டால்.....ட்ட்டொட்டடாய்ங்.....ஹி..ஹி... அம்மா அடுத்த பிரதமரானால் .நான் நிதியமைச்சராகிட வாய்ப்பிருக்கிறதா என இனிமேல்தான் பிரசன்னம் பார்க்க வேண்டும். மனசாட்சி, மானம் வெக்கம் எல்லாத்தையும் கழட்டி எதாவது ஒரு வங்கியில் ஐந்து வருசத்துக்கு பிஃக்ஸட் டெப்பாசிட்டில் போட்டு விட்டு கட்சி உறுப்பினர் அட்டை வாங்க வேண்டியிருக்கும். என்ன கொடுமையிது. ஏன் இப்படி விபரீதமாய் யோசிக்கிறேன். ஜீரணிக்கவே முடியலை....இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனை வரத்தான் வேண்டுமா....

நானும் தமிழ்நாடெங்கும் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைசியாய் செட்டிலாகியிருப்பது அண்ணாநகர் தபால் தந்தி அலுவகத்திற்கு பக்கதிலிருக்கும் அலஹாபாத் வங்கிக்கு அடுத்திருக்கும் 'சோனாபெல்' தான். சின்ன கடைதான்...உட்கார்ந்தெல்லாம் சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய்தான் சாப்பிடவேண்டும். அண்ணா நகர் பக்கம் வந்தால் ட்ரை பண்ணி பாருங்கள். கடந்த பத்து வருசமாய் அதே ருசி...எப்படித்தான் மெய்ண்டெய்ன் பண்ணுகிறார்களோ தெரியவில்லை. இந்த கடைக்கு நிறைய பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் எனக்கு தெரிந்த இரண்டுபேரில் ஒருவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி, இன்னொரு பிரபலம்...ஹி...ஹி...நாந்தேன்...

வடபழனி சிக்னலில் இருந்து கோயம்பேடு சிக்னல் வரைக்கும் இம்புட்டுத்தான் எளுத முடிஞ்சது......

இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொல்கிறேன்....ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்